ஏடிஎம்களில் இனி ரூ10,000 வரை எடுக்கலாம்- ரிசர்வ் வங்கி அனுமதி!
ஏடிஎம்களில் இனி நாளொன்றுக்கு ரூ10,000 வரை எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. நடப்பு கணக்கில் வாரத்துக்கு ரூ1,00,000 எடுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை: ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ4,500 வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்பை தளர்த்தி ரூ10,000 எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வங்கிகளில் நடப்பு கணக்குகளில் வாரத்துக்கு ரூ50,000 மட்டும் எடுக்க முடியும் என்பதும் தளர்த்தப்பட்டு ரூ1,00,000 வரை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
நாள் ஒன்றுக்கு ஒருநபர் முதலில் ரூ2,000 மட்டும் எடுக்க அனுமதி தரப்பட்டது. பின்னர் இது ரூ2,500 ஆகவும் அதைத் தொடர்ந்து ரூ4,500 ஆகவும் உயர்த்தப்பட்டது. இருந்தபோதும் வங்கிகளில் வாரத்துக்கு ரூ24,000 மட்டும் எடுக்க முடியும் எனவும் கூறப்பட்டிருந்தது.
தற்போது ஏடிஎம்களில் நாள் ஒன்றுக்கு ரூ10,000 வரை எடுக்கலாம் என வரம்பை தளர்த்தி அனுமதித்துள்ளது ரிசர்வ் வங்கி. நடப்பு கணக்குகளில் வாரத்துக்கு ரூ50,000 எடுக்கலாம் என்ற வரம்பும் தளர்த்தப்பட்டு ரூ1,00,000 வரை எடுக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வங்கிகளில் வாரத்துக்கு ரூ24,000 மட்டுமே எடுக்க முடியும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.