சவுமியா கொலை வழக்கு தீர்ப்பு குறித்து விமர்சனம்.. சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராக தயார் - கட்ஜு
டெல்லி: கேரள இளம்பெண் சவுமியா பலாத்கார வழக்கின் தீர்ப்பை விமர்சனம் செய்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நேரில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
கேரளாவில் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி சவுமியா என்ற இளம்பெண், தமிழக வாலிபரால் கடந்த 2011 ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 7 ஆண்டு சிறைத்தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் செப்டம்பரில் உத்தரவிட்டது.
கோவிந்தசாமியின் மரண தண்டனையை 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டதை விமர்சித்து முன்னாள் உச்சநீதிமன்ற மார்கண்டேய கட்ஜு செப்டம்பர் 17-ம் தேதியன்று தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் சவுமியா ரயிலிலிருந்து குதித்தார், கோவிந்தசாமி தள்ளிவிட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்த கட்ஜு "கேள்விப்பட்ட தகவலை" சாட்சியமாக நம்புகிறது கோர்ட் என்று விமர்சனம் செய்தார்.
"சட்டக்கல்லூரி மாணவர்கள் கூட கேள்விப்பட்ட தகவலை சாட்சியமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற அரிச்சுவடியை அறிந்தே வைத்திருப்பர்" என்று கூறியிருந்தார். மேலும் தீர்ப்பு 'மிகப்பெரிய தவறு' என்றும், சட்ட உலகில் பல ஆண்டுகளாக இருந்து வரும் நீதிபதிகளிடமிருந்து இத்தகைய தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை என்றும் கட்ஜு வேதனை தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், யு.யு.லலித் ஆகியோர் திங்கள்கிழமை விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பான எங்களின் தீர்ப்பை முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விமர்சித்துள்ளார். எங்கள் தீர்ப்பில் எங்கு தவறிழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நீதிமன்றத்தில் அவர் கூறினால் நலமாக இருக்கும்.
எனவே, அவர் நவம்பர் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கட்ஜுவுக்கு சம்மன் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக பேஸ்புக்கில் மார்க்கண்டேய கட்ஜு வெளியிட்டு உள்ள தகவலில், திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகவும், விவாதிக்கவும் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் நீதிபதிகள் ஒன்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியான என்னை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 124(7) நான் ஆஜராக தடை விதிக்கிறது. இது என்னை தடுத்து நிறுத்தாது என்று நீதிபதிகள் கருத்தில் கொண்டிருந்தால், நான் மகிழ்ச்சியாக கோர்ட்டில் ஆஜர் ஆவேன் என்னுடைய கருத்துக்களை தெரிவிப்பேன்," என்று கூறிஉள்ளார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு சம்மன் அனுப்பப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.