காந்தியைப் போல என்னையும் போட்டுத் தள்ளிடுவாங்க... அன்னா தரும் ஷாக் தகவல்!
டெல்லி: கனடாவில் இருந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போலவே தனது மரணமும் இருக்கும் எனவும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இவரது போராட்டத்தின் பலனாக நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப் பட்டது.
இந்நிலையில், தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, நிலம் கையகப் படுத்தும் மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார் ஹசாரே.
இது தொடர்பாக பஞ்சாப்பில் பயணம் மேற்கொண்டுள்ள ஹசாரே, அங்கு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர், ‘தனக்கு கனடாவில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், அதை வைத்து பார்க்கும் போது காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போலவே தனது மரணமும் இருக்கும்" என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.