ஆந்திராவில் 20 தமிழர் படுகொலை- சி.பி.ஐ. விசாரணை கோரிய திருமாவளவன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!
டெல்லி: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கூறி 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இது தொடர்பாக ஆந்திரா உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு திருமாவளவனுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டியதாக கூறி 20 தமிழரை ஆந்திரா செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் சுட்டுப் படுகொலை செய்தனர். இந்த படுகொலை நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இதனை கடுமையாகக் கண்டித்துள்ளது. இதனிடையே 20 பேர் படுகொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இதன் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இது தொடர்பாக ஆந்திரா உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு திருமாவளவனுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.