பெங்களூரில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்த முயற்சி: ரூ. 37 கோடி மரங்கள் மீட்பு
பெங்களூரு: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட இருந்த 36.41 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பெங்களூரு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்திய வனப்பகுதியில் குறிப்பிட்ட வனப்பகுதிகளில் மட்டுமே வளரும் மரங்கள் ஏராளம். இவை அனைத்தும் விலைமதிப்பற்றவைகள் ஆகும். சந்தனம் ,ஈட்டி, கோங்கு, தேக்கு, செம்மரம் உள்ளிட்டவைகள் உலக அளவில் விலை அதிகம் போகக்கூடிய மரங்கள்.
இம்மரங்களை வனப்பகுதியில் வெட்டி கடத்தும் கும்பல்கள் அதிகம். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள இந்த அரிய வகை மரங்களை கடத்தும் கும்பல்கள் கண்டெய்னர் லாரிகளில் மரத்தை ஏற்றி கப்பல் மூலமும், விமானம் மூலமும் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது.
ஆந்திரவனப்பகுதிகளில் அதிகமுள்ள செம்மரங்கள் அங்குள்ள காடுகளில் வெட்டி லாரிகளில் பெங்களுரு வழியாக சென்னைக்கு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பெங்களூரு போலீசார் தீவீர வாகன சேதனை நடத்தினர்.அப்போது வேகமாக வந்த இரண்டு வாகனங்களை மடக்கி பிடித்து சோதனை நடத்தியதில் 36.41 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 50 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஓட்டுனர்கள்,புரோக்கர்கள் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சென்னை, மங்களூரு, மும்பை வழியாக, இம்மரங்கள் ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருந்தது விசாரணையில் தெரியவந்தது.தொடர்ந்து அவர்களிடம் பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.