ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.. இலவச சலுகை மார்ச் 31வரை நீடிப்பு
மும்பை: ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த இலவச சேவை இவ்வாண்டு டிசம்பர் 31ம் தேதியோடு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அழைப்புகள், அளவற்ற இணையதள சேவைகளை இலவசமாக அளிப்பதாக வாக்குறுதியளித்தது. இதையடுத்து இதுவரை 5 கோடி பேர் ஜியோ சிம்களை வாங்கியுள்ளனர். இந்நிலையில், தொலைதொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய், வெளியிட்ட அறிவுறுத்தல்படி, எந்த ஒரு நிறுவனமும், தனது வரவேற்பு சலுகையை 3 மாதங்களுக்கு மிகாமல்தான் தர வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி ஜியோ தனது இலவச சேவையை ஆரம்பித்து, நாளை மறுநாள் 3ம்தேதியோடு 90 நாட்கள் நிறைவடையும். எனவே அதன்பிறகு இலவச அழைப்பு தரமுடியாதோ என்ற ஐயப்பாடு, ஏற்கனவே வாடிக்கையாளர்களானவர்களுக்கு ஏற்பட்டது. மேலும், டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு ஜியோ சிம் வாங்குவோருக்கு இலவசம் கிடைக்காதோ என்ற சந்தேகமும் இருந்தது.
இந்நிலையில், மும்பையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ வாடிக்கையாளர்கள் மனதில் பால் வார்த்துள்ளார். அவர் கூறுகையில், "ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளவற்ற அழைப்பு மற்றும் இணையதள சேவையை வழங்கி வருகிறோம். இந்த ஸ்கீம் ஏற்கனவே அறிவித்தபடி, டிசம்பர் 31ம் தேதி முடிவடைகிறது. ஆனால், ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு புத்தாண்டு சலுகை என்ற பெயரில் இதே ஸ்கீமை தொடருவோம். எனவே அளவற்ற அழைப்புகள் மற்றும் இணைய சேவை இலவசமாகவே தொடரும். மார்ச் 31ம் தேதிவரை இந்த சலுகை தொடரும். இதற்காக சிம்மை மாற்ற வேண்டிய தேவையெல்லாம் கிடையாது. டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு சிம் வாங்குவோருக்கும், மார்ச் 31ம் தேதிவரை இலவசம் தொடரும்" என்றார்.