ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு சலுகை செய்ததா டிராய்?
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலம் வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலத்தின் மூலம் டெலிகாம் வாடிக்கையாளர்கள் சந்தித்து வரும் கால் டிராப் பிரச்சனை, மோசமான சேவை என அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு எதிராக, முதல் முறையாக பகிரங்கமாக களமிறங்கியுள்ளது, இந்திய செல்லுலார் சேவை நிறுவன சங்கம் (COAI).
2300 மெகாஹெட்ஸ் பேண்ட் பிளாக் அளவை, 20 மெகாஹெட்சிலிருந்து, 10 மெகாஹெட்சாக டிராய் குறைத்ததாகவும், இது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு உதவும் செயல் என்றும் செல்லுலார் சேவை நிறுவன சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
ஏனெனில் முன்பு போல 20 மெகாஹெட்ஸ் பிளாக் அளவிலேயே ஏலம் விடப்படுமானால் ரிலையன்ஸ் ஜியோவால் அதில் பங்கேற்க முடியாது.
அதேநேரம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. தங்கள் நிறுவனத்திற்கு எதிராக செல்லுலார் சேவை நிறுவன சங்கம் செயல்படுவதாக அது குற்றம் சாட்டியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், குறைந்த கட்டணத்தில் செல்போன் மற்றும் இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்க அந்த நிறுவனம் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.
ஆகஸ்ட் 15ம் தேதி முதல், தனது சேவையை ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுக்க ்றிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.