20 வருடம் நடந்த லாவலின் ஊழல் வழக்கு: கேரள முதல்வருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை! நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த லாவலின் ஊழல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்திய லாவலின் ஊழல் வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த ஊழல் வழக்கு இது என்பது குறிப்பிடத் தக்கது.
கேரள நீர்மின் நிலையப் பணிகளுக்காக கனடாவைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதில் ரூ.374.5 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதெல்லாம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில், பினராயி விஜயன் மற்றும் 6 அரசு அதிகாரிகள் உட்படப் பலருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. நீண்ட ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கிலிருந்து பினராயி விஜயன் மற்றும் 6 பேரை விடுவித்து திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கேரள உயர் நீதிமன்றம், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கீழமை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.
அதேவேளையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கேரள மின்வாரிய அதிகாரிகள் மூன்று பேர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பினராயி விஜயன் 1996 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை கேரள மின் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.