ரயில் டிக்கெட் ரத்து செய்தால் இனி முழு பணமும் கிடைக்குமா?... இன்று முதல் புதிய முறை
டெல்லி: முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெடுகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே முழு பணம் கிடைக்கும். ரயில் டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறைகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 24 மணி நேரத்துக்கு முன்னர் வரை கேன்சல் செய்து முழு பணம் பெற்றுக் கொள்ளலாம். அதுவும் 25 சதவிகிதம் பிடித்தம் செய்து கொண்டு மீதி பணம் திரும்ப கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது இது 48 மணிநேரமாக மாற்றப்பட்டுள்ளது.
புதிய விதிமுறையின் படி முதல்வகுப்பு ஏசி பெட்டி பயணிகள் டிக்கெட்டினை கேன்சல் செய்தால் 120 ரூபாயும், ஏசி 2 டயர் டிக்கெட் எனில் ரூ.100, ஏசி 3 டயர் எனில் ரூ.90ம் ஏசி சேர் கார் டிக்கெட்டிற்கு ரூ.60ம், 2ம் வகுப்பு ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட் கேன்சல் செய்தால் ரூ.30ம் பிடித்தம் செய்து கொண்டு மீதி பணம் திரும்ப கொடுக்கப்படும்.
மேலும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரயில் புறப்பட்ட 2 மணி நேரத்துக்கு பின்னர் கேன்சல் செய்ய முடியாது. புதிய விதிமுறையின்படி காத்திருப்போர் பட்டியல் மற்றும் ஆர்ஏசி டிக்கெட்டுகளை ரயில் புறப்பட்ட 3 மணி நேரத்துக்கு பின்னர் கேன்சல் செய்தால் 30 ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு மீதி பணம் திரும்ப கொடுக்கப்படும்.
முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கெட்டுகளை கேன்சல் செய்வதிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி சாதாரண டிக்கெட்டுகளை டிக்கெட் வாங்கிய 3 மணி நேரத்துக்குள் மட்டுமே கேன்சல் செய்ய முடியும். இதற்கு முன்பு ரயில் புறப்படுவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னர் வரை சாதாரண டிக்கெட்டுகளை கேன்சல் செய்யலாம்.
இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் (ஜூலை 1) அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கேன்சல் செய்வதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கவே இந்த புதிய விதிமுறைகள் கொண்டு ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வேசன் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பணம் வசூல் செய்து விடுகின்றனர். அதேபோல ஏதோ ஒரு அவசரத்தில் பயணிக்க முடியாமல் போனால் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை கேன்சல் செய்வதிலும் தற்போது ஏகப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.
நாம் போகாவிட்டாலும் நம்முடைய டிக்கெட்டை யாருக்காவது மாற்றி கொடுக்கத்தான் போகின்றனர் இதனால் ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றாலும் பொதுமக்களின் பணத்தை திரும்ப தருவதில் பல சிக்கலான முறைகளை அமல்படுத்தியுள்ளனர் ரயில்வே துறையினர் என்பது ரயில் பயணிகளின் குற்றச்சாட்டாகும்.
இனி ரயில்வேதுறை தனியார்மயமாகிவிட்டால் ரிசர்வேசன் செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்தால் முழு பணமும் திரும்ப கிடைக்காது என்று கூறுவிடுவார்களோ?