லாலு கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாகும் ஜேத்மலானி, ராப்ரிதேவி
பாட்னா: லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகார் சட்டசபையில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 80 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பீகாரின் 5 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆகையால் லாலு கட்சி எளிதாக 2 எம்.பி.க்களைப் பெற முடியும்.
இந்த 2 இடங்களுக்கு மூத்த வழக்கறிஞரும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவருமான ராம்ஜேத்மலானி மற்றும் லாலுவின் மனைவியும் பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரிதேவி ஆகியோரை நிறுத்த லாலு பிரசாத் யாதவ் ஒப்புதல் அளித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்காக நிறைய உதவிகளை செய்தவர் என்ற அடிப்படையில் ராம்ஜேத்மலானியை ராஜ்யசபா எம்.பி.யாக்க லாலு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.