விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது இந்தியாவின் முதல் ஆர்எல்வி டிடி ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரான மறுபயன்பாட்டுக்குரிய முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட் இன்று காலை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு வெடித்துச் சிதறி கடலில் விழுந்து வீணாகி விடுவது வழக்கம். பலகோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் ராக்கெட்டுக்கள் இவ்வாறு வீணாவதை தவிர்க்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடிய ராக்கெட்டுக்களை பயன்படுத்துகிறது.
இந்நிலையில் இதே போன்று மறுபயன்பாட்டிற்கு ராக்கெட்டுக்களை கொண்டு வரும் சோதனையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இறங்கியது.
இது இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும். இதற்காக ஆர்.எல்.வி டிடி என்கிற ராக்கெட்டை தயாரித்த இஸ்ரோ இன்று அதை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவாண் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
ரூ95 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த ஆர்.எல்.வி டிடி ராக்கெட் இப்போது முதல்முறையாக தொழில்நுட்பரீதியாக சோதனை முறையில் ஏவப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ராக்கெட் பல செயற்கைக்கோள்களுடன் செலுத்தப்பட இருக்கிறது.