பாலஸ்தீனத்தில் பிரணாப் முகர்ஜி.. ரமல்லாவில் சாலைக்கு "இந்தியா" பெயர் சூட்டல்
ரமல்லா: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பாலஸ்தீன வருகையின் நினைவாக ரமல்லாவில் சாலை ஒன்றுக்கு 'இந்திய சாலை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
முதலில் ஜோர்டான் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர் 2வது கட்டமாக நேற்று பாலஸ்தீனம் சென்றடைந்தார். பாலஸ்தீனத்துக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான்.
பாலஸ்தீனத்தின் மேற்குக் கடற்கரை நகரான ரமல்லாவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸுடன் பிரணாப் முகர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரம், அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகிய இயக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர்.
பிரணாப் முகர்ஜியின் பாலஸ்தீன வருகையின் நினைவாக ரமல்லாவில் உள்ள சாலைக்கு "இந்திய சாலை' என்றும், சாலை சந்திப்புக்கு ஒன்றுக்கு "இந்திய சாலை சந்திப்பு' என்றும் பெயர் சூட்டப்பட்டது.
முன்னதாக, மறைந்த பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபத்தின் கல்லறையில் பிரணாப் முகர்ஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பாலஸ்தீனப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு இஸ்ரேல் செல்கிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை தொடக்கம் முதலே இந்திய அரசுதான் உறுதியாக ஆதரித்து வந்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதல் பாலஸ்தீனத்தையும் இஸ்ரேலையும் சமமாக அணுகும் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.