பேஸ்புக் போஸ்டால் லோக்சபா நடவடிக்கையை 'பேஸ்' செய்யும் சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா!
டெல்லி: சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வத்ரா பேஸ்புக்கில் போட்ட ஒரு போஸ்ட் தற்போது நாடாளுமன்றம் வரை எதிரொலித்துள்ளது. எம்.பிக்களை தரக்குறைவாக விமர்சனம் செய்துவிட்டார் என்று கூறி, அவருக்கு லோக்சபா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா. பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ராபர்ட் வத்ரா மீது நில மோசடி புகார்கள் நிலுவையிலுள்ளன.
இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில், ராபர்ட் வத்ரா பதிவு செய்த ஒரு 'நிலைத்தகவல் (ஸ்டேட்டஸ்)' அவரை சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது. "நாடாளுமன்றம் கூடிவிட்டது. எனவே, அவர்களின் சில்லரைதன அரசியலை அரங்கேற்றிக்கொள்ளலாம். நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை. தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களால் வழிநடத்தப்படும் இந்தியாவை பார்க்க வருத்தமாக உள்ளது" என்று கூறியிருந்தார்.
இதையறிந்த லோக்சபா பாஜக தலைமை கொறடா, அர்ஜுன் ராம் மேக்வால், வத்ராவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினையை தாக்கல் செய்துள்ளார். அதில், "மக்கள் பிரதிநிகளான எம்.பிக்களை அவமானப்படுத்தும் வகையில் வத்ரா போஸ்ட் உள்ளது. இது உறுதியாக எம்.பிக்களின் மாண்பை சீர்குலைக்கும் முயற்சி" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு, வத்ராவுக்கு, லோக்சபா செயலாளர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வத்ரா பதிலை மக்களவை சபாநாயகர், பரிசீலித்த பிறகு, இதை உரிமைமீறல் குழுவுக்கு அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.