ஓடும் பஸ்ஸில் கிண்டல் செய்த வாலிபரை பெல்ட்டால் விளாசிய சகோதரிகள்
ரோதக்: ஹரியானாவில் பேருந்தில் சில்மிஷம் செய்த வாலிபரை சகோதரிகள் இருவர் சேர்ந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஹரியானா மாநிலம் ரோதக்கைச் சேர்ந்தவர்கள் சகோதரிகளான ஆர்த்தி மற்றும் பூஜா. அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி முடிந்து வீடு செல்ல பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் அவர்களை கிண்டல் செய்துள்ளார். அதை அவர்கள் எதிர்த்ததும் அந்த நபர் தனது நண்பர்கள் இருவரை அழைக்க அவர்கள் வந்து சகோதரிகளை பார்த்து அசிங்கமாக செய்கை செய்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர்.
{ventuno}
சகோதரிகளில் ஒருவர் அதை தட்டிக் கேட்க அந்த வாலிபர் அவரின் கழுத்தை பிடித்துவிட்டார். இதை பார்த்த மற்றொரு சகோதரி கோபம் அடைந்து தனது பெல்ட்டை கழற்றி அந்த வாலிபரை அடித்து நொறுக்கினார். அவரும் சகோதரிகளை பதிலுக்கு அடித்தாலும் அவர்கள் விடாமல் அந்த நபரை தாக்கினர். பின்னர் அந்த வாலிபர்கள் சகோதரிகளை பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். அவர்களும் கீழே இறங்கி ஆர்த்தி மற்றும் பூஜாவை அடித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இத்தனை நடந்தும் பேருந்தில் இருந்தவர்கள் எதுவும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து சகோதரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அடிவாங்கிய வாலிபர் விரைவில் போலீஸாகப் போவதால் புகாரை திரும்பப் பெறுமாறு அவரது கிராமத்தார் சகோதரிகளை கேட்டுக் கொண்டனர். வாலிபர்கள் ஆர்த்தி, பூஜாவிடம் மன்னிப்பு கேட்பார்கள் என்று பஞ்சாயத்தார் தெரிவித்தனர்.
ஆனால் அடி வாங்கிய வாலிபர் உள்பட 3 பேரும் நாங்கள் தற்கொலை செய்வோமே தவிர அந்த பெண்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர்.