ராணுவத்துக்கான டிடி-3 இலகு ரக ஹெலிகாப்டர் சோதனை வெற்றி!
பெங்களூரு: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் (எச்ஏஎல்) அமைப்பு, இலகு ரக ஹெலிகாப்டர் டிடி-3 சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இந்திய விமானப்படைக்கு தேவையான உபகரணங்களை சப்ளை செய்துவருவது பெங்களூருவிலுள்ள எச்ஏஎல் பாதுகாப்பு அமைப்பாகும். எச்ஏஎல் சார்பில் இலகு ரக ஹெலிகாப்டரின் 3வது தொழில்நுட்ப வகை ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது.
இந்த ஹெலிகாப்டர் பெங்களூரு எச்.ஏ.எல் மையத்தில் இருந்து புறநகர் பகுதியிலுள்ள ஹொசக்கோட்டையிலுள்ள மற்றொரு டிவிசன் வரை சோதனை முறையில் பறக்கவிடப்பட்டது. ஹெலிகாப்டர் தரையிறங்கும் நேரத்திற்குள், பைலட்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்ட அனைத்து சோதனைகளையும் அவர்கள் செய்து பார்த்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி சோதனை ஓட்டத்தின் வெற்றியை புலப்படுத்துவதாக இருந்தது.
சோதனை ஓட்டம் குறித்து, எச்ஏஎல் தலைவர் ஆர்.கே.தியாகி ஒன்இந்தியாவிடம் கூறுகையில் "சோதனை ஓட்டத்தின் எந்த ஒரு தருணத்திலும் ஹெலிகாப்டர் தனது இயல்பை இழக்கவில்லை. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முதல்கட்ட செயல்பாட்டு அனுமதி (IOC) கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை இந்த சோதனை ஓட்டம் தந்துள்ளது.
எனவே, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைவிட மூன்று மாதம் முன்பே இந்த அனுமதியை பெற உள்ளோம். ஹெலிகாப்டரின் பழக்கும் நேரத்தை அதிகரித்தால் ஐஓசி அனுமதி இன்னும் சீக்கிரம் கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளோம். எனவே கூடிய விரைவில் அனுமதி பெற எச்ஏஎல் முயற்சி செய்யும். நீண்ட கால எச்ஏஎல் ஊழியர்கள் உழைப்பை இப்போது நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
இந்திய ராணுவம் இதுபோன்ற இலகு ரக விமானங்கள் 114 வேண்டும் என்றும், இந்திய விமானப்படை 65 ஹெலிகாப்டர்கள் வேண்டும் என்றும் எச்ஏஎல்லிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த இலகு ரக விமானங்கள் மிக உயர்ந்த மலைப்பகுதிகளில் எதிரிகளின் இலக்கை தாக்க ஏற்றவையாகும்.
டிடி1 மற்றும் டிடி2 வகை இலகு ரக ஹெலிகாப்டர்களின் இயந்திரங்களை மாற்றி அமைத்து டிடி3 வகை ஹெலிகாப்டர்களை உருவாக்கியுள்ளோம். எங்களது ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி அதில் கிடைக்கும் அனுபவங்களை பெற்றுக்கொண்டு அதற்கேற்ப இன்ஜினியர்கள் வேகமாக மாற்றங்களை செய்துள்ளனர். டிடி3 மற்றுமின்றி டிடி4 வகை ஹெலிகாப்டர்களும் முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவே இருக்கும். ஹெலிகாப்டர்களின் உபகரணங்கள் முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பாகவே இருக்கும்" இவ்வாறு தியாகி தெரிவித்தார்.
நம்மிடம் பேசிய, எச்ஏஎல் செயல் இயக்குநர் அசோக் தண்டன் கூறுகையில், "நிகழ்வாண்டு மார்ச் மாதத்தில், எல்சிஎச் டிடி-4 வரை ஹெலிகாப்டர்களை தயாரிக்க எச்ஏஎல் போர்ட் உறுப்பினர்கள் ரூ.126 கோடியை ஒதுக்க சம்மதித்தோம். அடுத்த ஆண்டின் துவக்கத்தில் டிடி4 வகை ஹெலிகாப்டர்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்" என்றார்.
டிடி3 வகை ஹெலிகாப்டர்கள் முந்தைய மாடல்களைவிட நீளம் குறைக்கப்பட்டவையாகும். ஹெலிகாப்டர் மேலே பொருத்தப்பட்டுள்ள விசிறி பழைய மாடல்களைவிட உயரமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஹெலிகாப்டர்களில் ஆயுதங்களையும் பொருத்தும் பணி நடைபெற்றுவருகிறது. 18 ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே உள்ள சியாச்சின் பகுதிக்கும் இந்த வகை ஹெலிகாப்டர் பயணிக்க வல்லது.