ஆக்சிஸ் வங்கி கிளையில் 100 கோடி ரூபாய் கருப்புப் பணம் மாற்றம்.. ஐ.டி. ரெய்டில் அம்பலம் !
டெல்லியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதன நடத்தினர்.
டெல்லி: டெல்லியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளை ஒன்றில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக 100 கோடி ரூபாய் மாற்றப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பிரதமர் மோடி நவம்பர் 8 ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என அறிவித்த நிலையில் கருப்புப் பணத்தை கருப்பு பண முதலைகள் அந்த பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு வங்கி அதிகாரிகளும் துணை புரிவதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் சோதனையில் வங்கி அதிகாரிகள் மூலமாக சில கருப்பு பண முதலைகள் பணத்தை மாற்றி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் ஆக்சிஸ் வங்கி கிளையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதைடுத்து அந்த வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் போலி ஆவணங்கள் மூலம் 44 புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த கணக்குகளில் சுமார் 100 கோடி ரூபாய் வரை விதிமுறைகளை மீறி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. அந்த ஒரு கிளையில் மட்டும் சுமார் 450 கோடி ரூபாய் வரை பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாந்தினி சவுக் ஆக்சிஸ் வங்கி கிளை மேலாளரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏற்கனவே ஆக்சிஸ் வங்கி நாடு முழுவதும் தனது 19 ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.