ஜெயின் துறவியின் சிதைக்கு எரியூட்டும் நிகழ்ச்சி ரூ.11.11 கோடிக்கு ஏலம்
மும்பை: ஜெயின் துறவி ஸ்ரீ பிரேம்சுர்ஜிஸ்வாஜியின் சிதைக்கு எரியூட்ட நடத்தப்பட்ட ஏலம் மூலம் ரூ. 11.11 கோடி கிடைத்துள்ளது.
ஜெயின் துறவியான ஸ்ரீ பிரேம்ஜிசுர்ஜிஸ்வாஜி(97) நிமோனியாவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள சைபீ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். தபக்கச்சா பிரிவின் தலைவராக இருந்த அவர் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு தீக்சை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அவரது சிதைக்கு எரியூட்டும் நிகழ்ச்சி ஏலம் விடப்பட்டது. ஜெயின் சமூகத்தை சேர்ந்த பிரபல டாக்டர், கட்டிட பில்டர், 3 முன்னணி தொழில் அதிபர்கள் கூட்டாக சேர்ந்து ரூ.11.11 கோடிக்கு எரியூட்டும் நிகழ்ச்சியை ஏலத்தில் எடுத்தனர்.
இந்த ஏல நிகழ்ச்சி வால்கேஸ்வரில் உள்ள பாபு பன்னாலால் ஜெயின் கோவிலில் 3 மணிநேரம் நடந்தது. அதன் பிறகு கோவிலில் இருந்து துறவியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஹ்யூக்ஸ் சாலையில் உள்ள மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஏலத்தில் வென்ற 5 பேரும் துறவியின் உடலுக்கு தீ வைத்தனர். துறவியின் உடலை எரிக்க 300 கிலோ சந்தன கட்டைகள் பயன்படுத்தப்பட்டன. துறவியின் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் விரைவில் கோவில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயின் துறவியின் ஈமச்சடங்கு நிகழ்ச்சி அதிக விலைக்கு ஏலத்தில் போயுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.
முக்கியமான துறவிகள் மரணம் அடையும்போது ஈமச்சடங்குகள் ஏலம் விடப்பட்டு அதில் கிடைக்கும் பணம் மூலம் புதிய கோவில்கள் கட்டப்படும்.