வழக்கில் இருந்து சல்மான் விடுதலையா, இல்லையா?: ரூ.2,000 கோடிக்கு நடந்த சூதாட்டம்
மும்பை: காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் விடுவிக்கப்படுவாரா இல்லை சிறையில் அடைக்கப்படுவாரா என ரூ.2,000 கோடிக்கு சூதாட்டம் நடந்துள்ளது என மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாதம் 28ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றினார் நடிகர் சல்மான் கான். இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
13 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் புதன்கிழமை மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சல்மான் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆனால் தண்டனை கிடைத்த வேகத்தில் சல்மான் ஜாமீன் பெற்றுவிட்டார். இதனால் அவர் சிறைக்கு செல்லாமல் வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில் இது குறித்து மும்பை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சல்மான் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவாரா மாட்டாரா என்பது குறித்து சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடந்துள்ளது. புதன்கிழமை காலை ஒரு ரூபாய்க்கு 28 பைசா கூடுதலாக கிடைக்கும் என்று பெட் துவங்கியது. மதிய நேரம் ஒரு ரூபாய்க்கு ரூ.10 என்ற கணக்கில் பெட்டிங் நடந்துள்ளது.
மும்பைக்கு வெளியே உள்ளவர்கள் தான் பெட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.