ஜிஎஸ்டியால் இந்திய சிறுவணிகம் அழியும்... சீன பொருட்கள் இறக்குமதி அதிகரிக்கும்.. ஆர்எஸ்எஸ் வார்னிங்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டியால் இந்தியாவின் சிறுவணிகம் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்றும், அதனால் சீனாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வது அதிகரிக்கும் என்றும் ஆர் எஸ் எஸ்சின் பொருளாதார
டெல்லி: இந்தியா முழுமைக்கும் ஒரே வரி என்ற அடிப்படையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஜி எஸ் டி வரியை அமல்படுத்தவுள்ளது. அவ்வாறு அமல்படுத்தினால் அது இந்தியாவின் சிறுவணிகத்தை அழிக்கும் என்றும் சீனாவின் பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்வதற்கு வழிவகுக்கும் என்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பு அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
ஆளும் பாஜக அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு ஆர் எஸ் எஸ் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி கொண்டு வரப்படவுள்ளதால் நாட்டின் சிறுவணிகர்கள் கடுமையான இழப்பை சந்திப்பார்கள் என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொருளாதார பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளர் மகாஜன் அளித்துள்ள பேட்டியில், " பருத்தி, நூற்பாலை உள்ளிட்டவை துறையில் உள்ள சிறு முதலீட்டாளர்கள், ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பாதிக்கப்படுவார்கள். கிராமப்புறங்களில் சிறு தொழில் செய்யும் பலர் வேலையிழக்கும் அபாயமும் ஏற்படும்.
ஒட்டுமொத்தமாக, இந்திய அளவில், சிறு, குறு வர்த்தகம் பாதிப்பதால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது அதிகரிக்கும். ரூ.20 லட்சத்திற்கும் மேல் வர்த்தகம் செய்யும் எந்த நிறுவனமும், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் இணைவது கட்டாயமாகும்.
அதேசமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவே, ஜிஎஸ்டி அமலுக்கு வருகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்." என்று கூறியுள்ளார்.
ஆனால் மத்திய அரசு," சிறு வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டுள்ளது. எங்கேயும் இப்போது இல்லாத வரியை கொண்டு வரவில்லை. இருக்கிற வரியை ஜி.எஸ்.டி.யின் உள்ளே கொண்டு வந்து உள்ளோம். ஒருவேளை குறைந்திருக்கலாமே தவிர, கூடுதலாக வரி விதிக்கப்படவில்லை." என்று கூறியுள்ளது.