சர்ச்சை பேச்சு..ராகுல் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் -ஆர்எஸ்எஸ் !
டெல்லி: ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய ராகுல் காந்தி , தனது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மகராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாக அந்த அமைப்பு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், காந்தி கொலை செய்யப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ் காரணம் என்று ராகுல் காந்தி ஒருபோதும் சொல்லவில்லை.
இதனிடையே, நான் ஆர்எஸ்எஸ் தொடர்பாகக் கூறியவற்றில் ஒரு வார்த்தையில் கூட மாற்றமில்லை. அதில் நான் உறுதியாக நிற்கிறேன் என ராகுல் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் தகவல்தொடர்புத் துறை தலைவர் மன்மோகன் வைத்யா தனது டுவிட்டர் பக்கத்தில், "ஆர்எஸ்எஸ் தொடர்பாக நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக இருக்கிறேன் என ராகுல் கூறியுள்ளார். எந்த வார்த்தைகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் உள்ள வார்த்தைகளா அல்லது பொதுமேடைகளில் கூறும் அப்பட்டமான பொய்களிலா" என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். பற்றி தொடர்ந்து பரப்பிவரும் பொய்யை நிறுத்திக்கொண்டு, பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.