”சரணம் ஐய்யப்பா” கோஷத்துடன் குவியும் பக்தர்கள் - தரிசன நேரத்தினை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு!
சபரிமலை: சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தரிசன நேரத்தினை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி நடைதிறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு கடந்த 16 ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
17 ஆம் தேதி முதல் புதிய மேல் சாந்தி சங்கரன் நம்பூதிரி தலைமையில் பூஜை நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக சபரிமலைக்கு ஐய்யப்ப பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. தற்போது மழை சற்று ஓய்ந்து உள்ளது.
அதிகரிக்கும் பக்தர்கள் வருகை:
இதன் காரணமாக சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. நேற்று காலை முதல் சபரிமலை வலிய நடைப்பந்தல், 18 ஆம் படிக்கு கீழ் உள்ள திடல், சன்னிதான பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சுற்றிலும் ஐய்யப்ப கோஷம்:
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐய்யப்ப கோஷமிட்டு சாமி அய்யப்பனை பயபக்தியுடன் வழிபட்டனர். இனி வரும் நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆன்லைன் தரிசன முன்பதிவு:
அதாவது காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலையில் 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு வந்தது. தற்போது 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் இனிமேல் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். கேரள போலீசாரால் ஏற்படுத்தப்பட்ட ஆன்லைன் தரிசன முன் பதிவுக்கு இதுவரை 12 லட்சம் பேர் முன் பதிவு செய்து இருக்கிறார்கள்.
வெளிநாட்டு பக்தர்களும் வருகை:
இதில் தமிழ்நாட்டில் இருந்து 5 லட்சத்து 9 ஆயிரம் பேரும், கேரளாவில் இருந்து 2 லட்சத்து 18 ஆயிரம் பேரும், ஆந்திராவில் இருந்து 2 லட்சத்து 1,000 பேரும், தெலுங்கானாவில் இருந்து 65 ஆயிரம் பேரும், கர்நாடகாவில் இருந்து 63 ஆயிரத்து 800 பேரும் முன்பதிவு செய்து உள்ளனர். அமெரிக்கா உள்பட 20 வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆன் லைன் தரிசனத்திற்கு முன் பதிவு செய்து உள்ளனர்.
சிறப்பு கூப்பன் பெற வசதி:
ஆன் லைன் தரிசன முன் பதிவு முற்றிலும் இலவசமாகும். இவ்வாறு முன் பதிவு செய்து வரும் ஐய்யப்ப பக்தர்கள் வழக்கமான பக்தர்களின் வரிசையில் காத்து நிற்காமல், வலிய நடை பந்தலில் உள்ள சிறப்பு வரிசை மூலமாக விரைவில் சாமி தரிசனம் செய்ய முடியும். ஆன் லைன் மூலம் முன் பதிவு செய்து வரும் ஐய்யப்ப பக்தர்கள், பம்பையில் உள்ள சிறப்பு சேவை மையத்தில் முன் பதிவு செய்து, பதிவிறக்கம் மூலம் பெறப்பட்ட சான்று நகலை காட்டி சிறப்பு கூப்பன் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.