சபரிமலையில் எதிரொலிக்கும் சரணகோஷம்: சன்னிதானம் முதல் சரங்குத்தி வரை அலைமோதும் பக்தர்கள்
சபரிமலை: கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக தலையில் இருமுடி ஏந்தி ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களின் அனுபவம் தனியானது. 41 நாட்கள் விரதமிருந்து ஐயனை காணச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதுப்புது அனுபவங்களுடன்தான் வீடுதிரும்புகின்றனர்.
மண்டலபூஜை காலத்தில் சபரிமலை வனப்பகுதிக்குள் பாதயாத்திரையாக நடந்து சென்று பதினெட்டு படிஏறி ஐயப்பனை கண்குளிர காண்பதே இப்புவியில் பிறவி எடுத்த பயனை அடைந்து விட்டதாக நினைக்கின்றனர் ஐயப்ப பக்தர்கள்.
காட்டுக்குள் சரணகோஷம்
ஐயப்பனை காண தலையில் இருமுடியுடன் சரணகோஷம் ஒலிக்க நடைந்து செல்வதே தனி அனுபவம்தான். கேரளாவில் உள்ள எருமேலி என்ற இடத்திலிருந்து நடக்கத் தொடங்கி பேரூர்தோடு, காளைகட்டி, அழுதை மலை, கரிமலை வழியாக பம்பை சென்று நீலிமலையைக் கடந்து சபரிமலையை அடைவது பெரிய பாதை எனப்படுகிறது.
நீலிமலை ஏறி
இதில் பம்பைவரை பஸ் மற்றும் வாகனங்கள் செல்கின்றன. பெரிய பாதையில் நடக்க முடியாதவர்கள் பம்பைவரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து நீலிமலை வரை ஏறி சன்னிதானத்துக்குச் செல்லலாம். இது சிறிய பாதை எனப்படுகிறது.
எரிமேலி - புல்மேடு
சபரிமலை கோவிலுக்கு எரிமேலி மற்றும் புல்மேடு ஆகிய 2 காட்டுப்பாதைகள் வழியாக பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த பாதைகள் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்ததாகும். கொடிய மிருகங்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும்.
வழி மாறும் பக்தர்களுக்கு
மேலும் வெளி உலகுடன் தொடர்பில்லாத ஆதிவாசிகளும் காட்டுப்பகுதியில் அதிகளவில் வசிக்கிறார்கள். காட்டுப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் வழி தவறி ஆதிவாசி குடியிருப்புகளுக்கும், மிருகங்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்கும் சென்று விடுகிறார்கள்.
வனப்பகுதியில் தடை
எனவே எரிமேலி காட்டு பகுதி வழியாக செல்லும் பக்தர்கள் மாலை 5 மணிக்கு பிறகு அந்த பாதையை பயன்படுத்த வனத்துறை தடை விதித்துள்ளது. புல்மேடு பாதை வழியாக செல்பவர்கள் மாலை 3 மணிக்கு மேல் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தோள்மீது சுமந்து
காடு மேடு வழியாக நடந்து செல்வதே ஒரு தனி சுகம். அதுவும் வாரிசை தோள்மீது சுமந்து கொண்டு சபரி ஐயனை காண செல்கிறார் ஒரு பக்தர். எருமேலியிலிருந்து பயணத்தைத் தொடங்கும் முன்பு பக்தர்கள் உடலில் பல வண்ணப் பொடிகளைப் பூசி, சரங்கள் குத்தியபடி பேட்டைத்துள்ளி ஆடிக்கொண்டு வருவார்கள். ஆடி முடித்துவிட்டு பெரிய பாதையில் நடக்க ஆரம்பிப்பார்கள்.
தூக்கிவிடும் ஐயப்பன்
பெரும்பாதையில் அழுதை மலை ஏற்றமும் கரிமலை ஏற்றமும் சற்றுச் சிரமமாக இருக்கும். கரிமலை இறக்கம் அதைவிட ஒரு படி மேல். ஏற்றத்திலும் இறக்கத்திலும் சிரமப்படும் சாமிகளை முகம் தெரியாத யாரோ ஒரு சாமி கைகொடுத்துத் தூக்கிவிடுவார்கள். அது ஐயப்பன்தான் என்பது பக்தர்களின் நம்பிக்கை
புனிதமான பம்பை நதி
கரிமலை இறங்கியதும் வருவது, கங்கை நதிக்குச் சமமாக மதிக்கப்படும் பம்பை ஆறு. அதன் தண்ணீர் குளுமையில் கால் வைத்தாலே உடம்பெல்லாம் சில்லிடும். நடுக்கும் குளிரில் அதில் ஒரு குளியல் போட்டால், அலுப்பும் களைப்பும் பறந்துவிடும். ஐயப்பனை தரிசிக்கும் முன்பாக பம்பை தரிசனம் முக்கியமானது.
மண்டலபூஜை
சன்னிதானத்தை நெருங்க நெருங்க நெய் வாசம் வீசும். ஐயப்பனை தரிசித்த பின்னர் நெய்யை வழித்த பிறகு பக்தர்கள் வீசும் தேங்காய் அனைத்தும் மொத்தமாகப் பிரம்மாண்டமாக எரிந்துகொண்டே இருக்கும். அதன் வெப்பமும் நெய்த் தேங்காய் வாசமும் நீண்ட தொலைவுக்கு வீசும். பனிக்கு இதமாகவும் இருக்கும்.
நீண்ட வரிசையில்
மண்டல பூஜை விழா வருகிற 27ஆம்தேதி நடைபெற உள்ளது எனினும் கார்த்திகை ஒன்றாம் தேதி நடை திறக்கப்பட்ட நாள் முதலே பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அலைமோதுகிறது.
6 மணிநேரம் காத்திருப்பு
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சன்னிதானத்தில் இருந்து சரங்குத்தி வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகே அவர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய முடிந்தது.
பெண் போலீசார் கண்காணிப்பு
மேலும் 12 வயதிற்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை செல்ல தடை உள்ளதால் அவர்களை பெண் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை தடை செய்யப்பட்ட வயதிற்குட்பட்ட பெண்கள் யாரும் சபரிமலை ஏற முயற்சி செய்யவில்லை.
ஆன்லைன் முன்பதிவு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் தரிசனத்துக்கு முன்பதிவு வசதி மூலம் 3 லட்சத்து 63 ஆயிரத்து 614 பேர் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் தரிசனத்துக்கு முன்பதிவு செய்பவர்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் வந்து சுவாமிதரிசனம் செய்வது தெரியவந்துள்ளது.
பக்தர்கள் கூட்டம்
பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காக கேரள போலீஸ் சார்பில் ஆன்லைன் முன்பதிவு வசதி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. படிப்படியாக இதில் முன்பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
பதினெட்டம்படி ஏற அனுமதி
முன்பதிவு செய்பவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் மூன்று மணி நேரம் முன்னதாக பம்பையில் தங்கள் பதிவு அத்தாட்சியை கொடுத்து கூப்பன் பெற வேண்டும். அந்த கூப்பனுடன் சன்னிதானம் வந்து அதற்காக அமைக்கப்பட்டுள்ள கியூவில் நின்று18 ஆம் படியேற செல்ல வேண்டும்.
நேரடியாக சன்னிதானம்
இவர்கள் மரக்கூட்டத்திலிருந்து சரங்குத்தி செல்லும் கியூவிற்கு செல்லாமல் நேரடியாக சன்னிதானம் செல்ல முடியும்.
20000 பக்தர்கள்
மண்டல காலம் தொடங்கியது முதல் நேற்று வரை 18 நாட்களில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 614 பேர் தரிசனம் செய்துள்ளனர். தினமும் சராசரியாக 20 ஆயிரத்து 200 பேர் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.
அன்னதானப் பிரபுவே
ஐயப்பனுக்கு அன்னதானம் உகந்தது. அன்னதானம் செய்யும் இடங்களில் ஐயப்பன் தரிசனம் தருவார் என்பது ஐதீகம். சபரிக்கு வரும் பக்தர்கள் வயிராற உணவு பரிமாறுகின்றனர்.
இல்லறத்தில் துறவறம்
பாட்டுப்பாடி, பஜனை பாடி ஐயப்பனை அழைப்பது தனி சுகம். ஐயனை தரிசிக்க வரும் பக்தர்களும் ஆனந்தமாய் ஐயப்பனை எண்ணி பாடுகின்றனர். இதை கேட்கும் பக்தர்களும் மெய்மறந்து ரசிக்கின்றனர்.
வயதானாலும் தரிசனம்
இளையவர்கள் முதல் முதிய பக்தர்கள் வரை கூட்டம் கூட்டமாக வந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். சாமியே சரணம் ஐயப்பா! அடுத்த வருடமும் தரிசிக்க அருள் புரியப்ப என்று வேண்டிக்கொண்டு செல்கின்றனர் இங்கு வரும் பக்தர்கள். அதுதான் சபரிமலை ஐயனின் மகிமை.