மாலேகான் குண்டுவெடிப்பு: ஜாமீன் கோரும் பெண் சாமியார் பிரக்யா சிங்
மும்பை: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் இருந்து வரும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாகூர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
2008ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங் தாகூர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அண்மையில் உஜ்ஜைனி நகரில் நடந்த கும்பமேளாவில் கலந்து கொண்டு ஷிப்ரா நதியில் புனித நீராட அவருக்கு நீதிமன்றம் உத்தரவு அளித்தும் போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து அவர் சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கியதால் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு போபாலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் தனது பெயரை சேர்க்கப் போவது இல்லை என்று தேசிய புலனாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளதையும், தன் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து அவர் ஜாமீன் கோரியுள்ளார்.
அவரது மனுவை மும்பை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 6ம் தேதி அவரது மனு விசாரணைக்கு வருகிறது.முன்னதாக அவர் பல முறை ஜாமீன் கோரி அது மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.