சஹாரா வழக்கு: பத்திரிகையாளர் பிரகாஷ் ஸ்வாமியை திஹார் சிறையில் அடைக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
சஹாரா வழக்கில் பத்திரிகையாளர் பிரகாஷ் ஸ்வாமியை திஹார் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி: சஹாரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தாமே வலிய வந்து தலையை கொடுத்த பத்திரிகையாளர் பிரகாஷ் ஸ்வாமியை திஹார் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சஹாரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் வாங்கிய ரூ20,000 கோடி பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இந்த பணத்தை அரசியல்வாதிகள் பலரும் சுருட்டிக் கொண்டு ஆதாயம் அடைந்தனர்.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சஹாரா நிதி நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய் 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் பொதுமக்களுக்கு பணத்தை திருப்பித் தருவதற்காக சொத்துகளை விற்க வேண்டியுள்ளது என கூறி ஜாமீன் பெற்று வெளியே வந்தார் சுப்ரதா ராய்.
சுப்ரதா ராய்க்கு எச்சரிக்கை
இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகய், ஏகே சிக்கிரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரதா ராய் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தபடி பொதுமக்களுக்கு திருப்பி தருவதற்காக ரூ1,500 கோடியை ஜூன் 15-க்குள் 'செபி'யிடம் (பங்கு சந்தை கண்காணிப்பு அமைப்பு) செலுத்த வேண்டும். இல்லையெனில் மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிடப்படும் என நீதிபதிகள் எச்சரித்திருந்தனர்.
பரபரப்பை ஏற்படுத்திய பிரகாஷ் ஸ்வாமி
இதனிடையே சஹாரா குழுமத்துக்கு சொந்தமான நியூயார்க்கில் உள்ள ஹோட்டல் பிளாஷாவை ரூ3,500 கோடிக்கு வாங்குவதாக சென்னையை சேர்ந்தவரும் அமெரிக்காவில் வசிப்பவருமான பத்திரிகையாளர் பிரகாஷ் ஸ்வாமி தாக்கல் செய்த மனு மீதும் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. சஹாரா குழுமத்துக்கு சொந்தமான நியூயார்க் ஹோட்டல் பிளாஷாவை தமக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்துள்ள எம்ஜி கேப்பிடல் ஹோல்டிங்ஸ் எல்எல்சி நிறுவனத்துக்காக வாங்குவதாக பிரகாஷ் ஸ்வாமியின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
திடீர் பல்டி
ஆனால் திடீரென தாம் நியூயார்க் ஹோட்டல் பிளாஷாவை வாங்கவில்லை என பிரகாஷ் ஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் பல்டி அடித்தார். இதனால் கடும் அதிருப்தியடைந்த உச்சநீதிமன்றம் பிரகாஷ் ஸ்வாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் ஏப்ரல் 27-ந் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்ததற்காக ரூ10 கோடி அபராதத்தை கட்டிவிட்டு அமெரிக்கா செல்லுமாறு பிரகாஷ் ஸ்வாமிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
சிறையில் அடைக்க உத்தரவு
பிரகாஷ் ஸ்வாமியோ ரூ10 கோடி அபராதத்தை நேற்று வரை கட்டவில்லை. இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரூ10 கோடி அபராதத்தை கட்டாத பிரகாஷ் ஸ்வாமியை ஒரு மாதம் சிறையில் அடைக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டனர். இதனையடுத்து பிரகாஷ் ஸ்வாமி டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
டொனால்ட் ட்ரம்பும் வாங்கியிருந்தார்...
பிரகாஷ் ஸ்வாமி வாங்குவதாக சொன்ன நியூயார்க் ஹோட்டல் பிளாஷாவின் பெரும்பகுதி பங்குகளை முன்னர் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாங்கியிருந்தார். பின்னர் அதை விற்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.