காஷ்மீர் பிரச்சினைக்கு போர் ஒன்றே தீர்வாகாது.. சல்மான் கான் பேச்சு
மும்பை: காஷ்மீர் பிரச்சினைக்கு போர் ஒன்றே தீர்வாகாது. எல்லையில் நாள்தோறும் வீரர்கள் கொல்லப்படுவதை தடுக்க இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று சல்மான் கான் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்கள் இந்தியா வர கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தடைவிதிக்கப்பட்டது. பாகிஸ்தான் நடிகர்கள் மீதன இந்த தடை குறித்து அப்போது கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் சல்மான் கான், பாகிஸ்தான் நடிகர்கள் கலைஞர்கள். அவர்கள் விசா பெற்று இந்தியாவிற்கு வந்து உள்ளனர், அவர்களுக்கு 'விசா' வழங்கியது யார்? இந்திய அரசுதான் கொடுத்தது, என்று கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளப்பியிருந்தது.
இந்நிலையில் தன்னுடைய டியூப் லைட் படத்தை பிரமோட் செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சல்மான் கான், போருக்கு உத்தரவிடுபவர்களை எல்லைக்கு அனுப்ப வேண்டும், முதலில் சண்டையிட உத்தரவிட வேண்டும். அவர்களுடைய கை, கால்கள் நடுங்கும். போரானது ஒருநாளில் முடிந்துவிடும். பின்னர் அவர்கள் நாற்காலியில் இருந்து பேசுவார்கள்.
போரானது ஒருநாட்டிற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. போர் நடந்தால் இருதரப்பு மக்களும் எல்லையில் உயிரிழப்பார்கள். பேச்சுவார்த்தை மற்றும் அமைதியே இருநாடுகளையும் முன்னெடுத்து செல்லும். எல்லையில் நாள்தோறும் வீரர்கள் கொல்லப்படுவதை தடுக்க இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.