கார் விபத்து வழக்கு... பாடகர் கமல்கானை சாட்சியாக விசாரிக்கக் கோரிய சல்மான்கான் மனு டிஸ்மிஸ்
மும்பை: 2002ஆம் ஆண்டு கார் ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கில் தமது நண்பரான பாடகர் கமல்கானை சாட்சியாக விசாரிக்கக் கோரிய நடிகர் சல்மான்கான் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பையில் கடந்த 2002-ம் ஆண்டு சல்மான்கான் பாந்திரா பகுதியில் கார் ஓட்டிச் சென்றார். அப்போது அவரது கார் நடைபாதையில் படுத்து உறங்கியவர்கள் மீது மோதியது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவ்வழக்கில் நடிகர் சல்மான்கனுக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
இவ்வழக்கில் நண்பரும் பாடகருமான கமல்கானை சாட்சியமாக விசாரிக்க கோரி சல்மான்கான் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை நீதிபதி ஜோஷி நேற்று விசாரித்தார்.
அப்போது மிக முக்கிய வழக்குகளில்தான் இப்படியான சாட்சியங்களுக்கு சம்மன் அனுப்ப முடியும். இதுபோன்ற வழக்குகளில் அப்படி அனுப்ப முடியாது என்று கூறி சல்மான்கானின் மனுவை டிஸ்மிஸ் செய்தார். இந்த வழக்கில் இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.