துபாய் செல்ல வேண்டும்.. ஹைகோர்ட்டில் அனுமதி கோரும் சல்மான் கான்
மும்பை: மே 29ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் செல்ல அனுமதி கோரி பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் 2002ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றினார். இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர். 13 ஆண்டுகளாக நடந்த வழக்கில் சல்மான் கானுக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 6ம் தேதி தீர்ப்பு அளித்தது.
மும்பை உயர் நீதிமன்றம் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தண்டனையை சஸ்பெண்ட் செய்து சல்மானுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்திடம் அனுமதி கோர வேண்டும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் வரும் 29ம் தேதி நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள துபாய் செல்ல அனுமதி கோரி சல்மான் மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீரில் பஜ்ரங்கி பாய்ஜான் படப்பிடிப்பில் இருந்த சல்மான் கான் தற்போது மும்பை திரும்பியுள்ளார்.