இந்த ரோதக் சகோதரிகளுக்கு ஊர் ஊராக போய் இளைஞர்களை அடிப்பதுதான் வேலையோ....??
டெல்லி: ஹரியானா மாநிலம் ரோதக் நகரில் ஓடும் பேருந்தில் தங்களைச் சீண்டிய இளைஞர்களை சரமாரியாக அடித்து பரபரப்பை ஏற்படுத்தி ஹரியானா மாநில அரசிடமிருந்து பரிசையும் பெற்று விட்ட சகோதரிகள் இருவர், ஏற்கனவே கடந்த மாதமும் இதேபோல சாலையில் வைத்து ஒரு இளைஞரை அடித்தது போன்ற வீடியோ வெளியாகி இவர்கள் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோதக் நகர அரசுப் பேருந்தில் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி இளம் சகோதரிகளான ஆர்த்தி குமார், பூஜா ஆகியோர் பயணம் செய்தனர். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த சில இளைஞர்கள் இந்த இளம்பெண்களை ஈவ் டீசிங் செய்தாதக கூறப்படுகிறது. மேலும் அப்பெண்கள் மீது அவர்கள் காகிதங்களையும் வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அந்த இரு சகோதரிகளும் கோபமடைந்தனர். டிரைவர், கண்டக்டரிடம் புகார் கூறியும் அவர்கள் எதுவும் செய்யவில்லையாம். பிற பயணிகளும் கூட உதவ முன்வரவில்லை என்று தெரிகிறது. கர்ப்பிணிப் பெண் ஒருவர் எதிர்ப்புக் குரல் கொடுத்தபோது அவரைத் தாக்க அந்த இளைஞர்கள் முயன்றதாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்த இரு சகோதரிகளும் தங்களிடம் இருந்த பெல்ட்டால் அந்த இளைஞர்களின் முகத்திலும், உடம்பிலும் மாறி மாறி அடித்து துவைத்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த காட்சிகளை பேருந்தில் இருந்த மற்றொரு பெண் பயணி செல்போன் மூலம் வீடியோ எடுத்தாராம். இது இணையதளம், டிவி சானல்கள் என அனைத்திலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி குல்தீப், மொஹித், தீபக் என்ற மூன்று இளைஞர்களை ஈவ் டீசிங் வழக்கில் கைது செய்தனர்.
ஒரு மாதத்திற்கு முன்பே ஒரு அடிதடி
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது. அதிலும் இந்த இரு சகோதரிகளே இருப்பது போல காட்சி உள்ளது. அதிலும் ஒரு இளைஞரை இவர்கள் பொது இடம் ஒன்றில் வைத்து அடித்து வெளுக்கின்றனர். இந்த வீடியோவில் இருப்பது தாங்கள்தான் என்று அந்த சகோதரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த இரு சகோதரிகளின் செயல் குறித்து டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பலர் விமர்சனம் செய்யவும் ஆரம்பித்துள்ளனர். இவர்கள் செட்டப் செய்து இப்படி வீடியோவை வெளியிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உண்மை என்னவோ....!