சானியாவுக்கு கேல் ரத்னா. தமிழகவீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு அர்ஜூனா விருது. பிரணாப் வழங்கி கவுரவிப்பு
டெல்லி : டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு கேல் ரத்னா விருதும் தமிழகத்தைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு அர்ஜூனா விருது உள்ளிட்ட பல்வேறு வீரர்களுக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார்.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு மிக உயரிய விருதாக கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருது ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருதுக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனையும், கடந்த ஜூன் மாதத்தில் நடந்த விம்பிள்டன் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தவருமான சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
தேர்வு குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட சானியா மிர்சாவுக்கு விருது வழங்க மத்திய விளையாட்டு அமைச்சகமும் ஒப்புதல் அளித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சானியா மிர்சாவுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம் உள்ளிட்ட 17 பேருக்கு அர்ஜூனா விருதை வழங்கி பிரணாப் முகர்ஜி கவுரவித்தார்.
மேலும் 5 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதும், 3 பேருக்கு தயான்சந்த் விருதையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.