இப்படி எல்லோரையும் டிரான்ஸ்பர் செய்வதற்கு பேசாமல் சசிகலாவை திகாருக்கு அனுப்பிடலாமே?
சிறையில் சசிகலா முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் சிறை துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதற்கு பதிலாக பேசாமல் சசிகலாவை திகாருக்கு டிரான்ஸ்பர் செய்துவிடலாமே.
பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிறை துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதற்கு பதிலாக சசிகலாவை திகாருக்கு அனுப்பிவிடுவதுதான் சரியாக இருக்கும் என்கின்றன கர்நாடகா போலீஸ் வட்டாரங்கள்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து பதவிக்காக வெறியாட்டம் போட்ட சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கும் அவர் அடங்க மறுத்து அவ்வப்போது விதிமீறல்களை மீறி வருவதாக செய்திகள் வெளியாகின.
டிஐஜி ரூபா ஆய்வு
இந்நிலையில் சிறை துறை டிஐஜியாக உள்ள ரூபா கடந்த வாரம் பெங்களூர் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறைத் துறையில் முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. மேலும் சசிகலாவுக்கு கூடுதல் சலுகைகள் கொடுப்பதாகவும், அவர் சிறையைவிட்டு ஓரிரு முறை வெளியே சென்றுள்ளார் என்றும் சக கைதிகள் உண்மையை உடைத்தனர்.
சசிகலா அறையில் சமையலறை
அதன்பேரில் சசிகலா அறையில் சென்று ஆய்வு செய்தபோது அங்கு அவருக்கென்று சமையலறை இருந்தது தெரியவந்தது. மேலும் சசிகலா, பார்வையாளர்களை சந்திப்பதற்காக தனி அறை ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுபோன்ற சிறப்பு வசதிகளை பெற சசிகலா சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
உயரதிகாரிக்கு கடிதம்
இதைத் தொடர்ந்து இந்த முறைகேடுகள் குறித்து மாநில டிஜிபி தத்தாவுக்கு ரூபா கடிதம் எழுதினார். இதனால் தமிழகத்திலும், கர்நாடகாவிலும் புயல் கிளம்பியது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் நியமினம் செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் இடமாற்றம்
இதனிடையே சசிகலாவுக்கு உதவிய கைதிகள் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்திய ரூபா, அதில் சம்பந்தப்படுத்தப்பட்ட சத்திய நாராயண ராவ், சிறைத் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் என 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிலும் ராவ் காத்திருப்பு பட்டியலில் உள்ளார்.
பழி ஒரு புறம்
இந்த அதிகாரிகளை மாற்றிவிட்டு புதிய அதிகாரிகளை நியமித்தாலும் சசிகலா மீண்டும் ஆட்டம் போடமாட்டார் என்பது என்ன நிச்சயம். பழி ஒரு புறம் பாவம் ஒரு புறம் என்பதை போல் தவறிழைத்த சசிகலாவை திகார் சிறைக்கு மாற்றாமல் மற்ற அதிகாரிகளை மாற்றி என்ன பயன்? என்பது கர்நாடக போலீசாரின் குமுறல்.