எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால், சசி தரப்புக்குதான் இரட்டை இலை சின்னம்.. வாதம் தீவிரம்
டெல்லி: எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் அதிகம் பேர் ஆதரவு இருப்பதால் சசிகலாவுக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய, இரு அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்கள் மற்றும் கருத்தை நேரில் இன்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இருதரப்பினரும் இன்று காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆரம்பித்தனர்.
முதலில் ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட வாய்ப்பு வழங்கப்பட்டது. பிறகு சசிகலா தரப்பு விவாதிக்க அனுமதிக்கப்பட்டது. தலா ஒன்றரை மணி நேரத்தில் வாதத்தை முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தாலும், வாதம் நீண்டது. எனவே மதியம் 2 மணியளவில் உணவு இடைவேளை விடப்பட்டது.
முன்னதாக, 122 எம்.எல்.ஏக்கள், 38 எம்.பிக்கள் இருப்பதால் சசிகலா அணிக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று, சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.
சல்மான் குர்ஷித், மோகன் பராசுரன் ஆகியோர் வாதம் செய்ய உள்ளனர். உணவு இடைவேளைக்கு பிறகும், மேலும் 2 மணிநேரம் வாதங்கள் தொடரும் என கூறப்படுகிறது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிக்கும்.