தினகரனுக்கு இன்னிக்கு "சின்னம்மா"விடம் நல்லா இருக்கு.. ஆயப்போகுது இன்னிக்கு!
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் சந்திக்கும் போது அவரால் கட்சியில் ஏற்பட்டுள்ள ஏகப்பட்ட குழப்பங்களுக்காக நல்ல டோஸ் கிடைக்கும் என்று தெரிகிறது.
பெங்களூர்: பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, இன்று தன்னை சந்திக்க வரும் தினகரனை கடுமையாக திட்டித் தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு உறுதியாகி பெங்களூர் சிறைக்கு செல்வதற்கு முன்னர் தனது அக்காள் மகன் தினகரனை அதிமுக துணை பொதுச் செயலாளராக புதிய பதவியை உருவாக்கி உட்கார வைத்து விட்டுப் போனார்.
அதாவது ஜெயலலிதாவின் கட்சியும், ஆட்சியும் தங்கள் குடும்பத்துக்கே சொந்தம் என்பதற்காக பஸ்ஸில் கைகுட்டை போட்டு இடம் பிடிப்பது போல் தினகரனை அமர வைத்தார். அவர் போனது முதலே அதிமுகவில் பெரும் குழப்பம் அதிகரித்தது.
சசிகலாவை ஆலோசிக்காமல்
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். அப்போது ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் புகாருக்கு பதில் அளிக்குமாறு ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் விதித்த கெடு முடிய இருந்த நாளில் சசிகலாவை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக தினகரனே பதில் அளித்தார்.
தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு
சம்பந்தமே இல்லாமல் தினகரன் அளித்த பதில் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்ததை தொடர்ந்து சசிகலா பதிலளிக்க மற்றொரு கெடு விதிக்கப்பட்டது. இதனால் தினகரன் மீது சசிகலா கடும் அதிருப்தியில் இருந்தார். மேலும் சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு தினகரனே தனித்து செயல்பட முனைவதாக தகவல்களும் சசியின் காதுகளுக்கு சென்றன.
வேட்பாளர் தேர்வு
சசிகலா குடும்பத்தினர் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனை வேட்பாளராக நிறுத்தியதற்கு சசிகலா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற போட்டியில் அச்சின்னம் முடக்கப்பட்டது. இது சசிகலாவை வெகுவாக பாதித்தது.
தொப்பி... தொப்பி
இதைத் தொடர்ந்து அதிமுக அம்மா கட்சி வேட்பாளராக தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தொப்பியை தேர்தல் சின்னமாக தேர்ந்தெடுத்த தினகரன் மீது சசிகலாவுக்கு ஆத்திரம் வந்தது. இதை அவரை சந்திக்க சிறை சென்ற அமைச்சர்களிடம் கொட்டி தீர்த்தார்.
பணப்பட்டுவாடா
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து தேர்தல் ரத்தானது. இதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் இரட்டை இலை தங்களுக்கு வர வேண்டும் என்பதற்காக அவர் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிப்பதற்காக டெல்லி தொழிலதிபரிடம் லஞ்சம் கொடுத்த புகாரில் தினகரன் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.
மகாதேவன் மரணம்
அண்ணன் மகன் மகாதேவன் மரணத்தால் மனஉளைச்சலில் உள்ள சசிகலாவுக்கு இதுபோன்ற தொடர் சம்பவங்கள் அதிர்ச்சியை அளித்துள்ளன. தினகரன் சிக்கியது போதாது என்று எடப்பாடி அரசு கவிழ்ந்து ஓபிஎஸ் அணியுடன் இணைய முயற்சிக்கும் சூழலும் உருவாகும் அளவுக்கு தினகரன் நடந்து கொண்டுள்ளதால் கடும் சினம் கொண்டுள்ளார். இந்நிலையில் சசிகலாவை சந்திக்க சிறை செல்லும் அவருக்கு செம டோஸ் காத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.