ஜெ. ஆன்மா இளைப்பாறும் வகையில் பிறந்த நாள் கொண்டாடுவோம்.. சிறையில் இளைப்பாறும் சசி கடிதம்!
மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா இளைபாறும் வகையில் அவரது பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று பெங்களூரு சிறையில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அக்கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு; சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனைப்பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, அங்கிருந்தவாறு ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுகவினருக்கு வேண்டுகோள் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 33 ஆண்டுகள் ஜெயலலிதாவிடன் இருந்து பிறந்த நாளை கொண்டாடினேன் என்றும் அவரது அன்பையும் பாசத்தை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ள சசிகலா, ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அதிமுகவை காக்கவும், அதிமுக ஆட்சியை நிலை நிறுத்தவும் சபதம் ஏற்போம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியை எதிரிகள், துரோகிகள் வீழ்த்த நினைத்த போது ஜெயலலிதாவின் ஆன்மாதான் நம்மை வழி நடத்தியது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சசிகலா, அவரது ஆன்மா இளைபாறும் வகையில் அவரது பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அவரது புகழ் நிலைத்திருக்கும் வண்ணம் அதிமுகவினர் செயல்பட வேண்டும் என்றும், ஏழைய எளியோருக்கு உணவு வழங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கவும் சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். பொது இடங்களில் ஜெயலலிதாவின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்துமாறும் அவர், அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.