சசிபெருமாள் எப்படி உயிரிழந்தார்? நீதிபதிகள் குழு விசாரணை நடத்த பொன்.ரா. கோரிக்கை
டெல்லி: காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
கடந்த பல ஆண்டுகளாக மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த காந்தியவாதி சசி பெருமாள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று தன் உடல், பொருள் மட்டுமின்றி இப்போது தன்னுடைய உயிரையும் அர்ப்பணம் செய்திருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலை பேரூராட்சி பகுதியில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் நிறைந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை இந்தமாதம் 21 ஆம் தேதிக்குள்ளாக மூடப்படும் என்று உறுதி மொழி கொடுத்து மதுக்கடைகள் மூடாத காரணத்தால் அந்தப் பகுதி மக்கள் போராட்டக்குழு மூலமாக அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து போராட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
அதன்படி, நேற்று போராட்டத்தை அறிவித்து உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவர் ஜெயசீலன் தலைமையில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதில் கலந்து கொண்டார்கள். தீக்குளிக்கும் போராட்டமாக அறிவிக்கப்பட்டு நேற்று காலை அது செல்போன் டவர் மீது ஏறி நடத்தும் போராட்டமாக மாற்றப்பட்டது.
காவல்துறையை சேர்ந்தவர்கள் உடனடியாக இந்த போராட்டத்தின் மீது செயல்பட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்காது. நமக்கு இப்போது ஏற்படக்கூடிய சந்தேகம் தீயணைப்புத்துறையினர் மேலே செல்லும் போது சசி பெருமாள் உயிரோடு இருந்தாரா? இல்லையா?
இறந்து விட்டார் என்று இவர்களே கருதினால் இறந்து விட்டார் என்று முடிவெடுப்பதற்கு இவர்கள் யார்? மருத்துவர்களா?
உயிரோடு இருந்தார் என்று சொன்னால் அவரை கட்டி கீழே இறக்கிய விதம் மிகவும் மோசமானது. கீழே இறக்கும் போது அவர் இறந்தாரா? அல்லது மேலேயே உயிர் போயிருக்கிறதா? உயிர் மேலேயே போனது என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்? எனவே இந்த மரணத்தில் ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன.
எனவே உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இதில் கவனக்குறைவாக நடந்து கொண்ட காவல்துறை அதிகாரி மீது சட்டபூர்வமான நடவடிக்கையை தமிழக அரசாங்கம் எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.