"சத்யமேவ ஜெயதே.." விடுதலைக்கு பிறகு எடியூரப்பா கூறியது! #CBI Special Court
வாய்மையே வென்றுள்ளது என்று, லஞ்ச வழக்கில் விடுதலையானதும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: முதல்வராக பதவி வகித்தபோது ரூ.40 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், பாஜக கர்நாடக மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா விடுதலையாகியுள்ளார். இதன்மூலம், வாய்மை வென்றுள்ளது என்று எடியூரப்பா கூறினார்.
எடியூரப்பா மீதான லஞ்ச புகாரை அரசு தரப்பு ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை எனக்கூறி சிறப்பு சிபிஐ கோர்ட் இன்று அவரை விடுதலை செய்தது. தீர்ப்பின்போது நீதிமன்றத்திற்குள் வந்து அமர்ந்திருந்தார் எடியூரப்பா. தீர்ப்பு வெளியான பிறகு மகிழ்ச்சியோடு கோர்ட்டுக்கு வெளியே வந்த எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: என்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுதலையாகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
நீதிமன்றம் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. இப்போது எனக்கு நீதி கிடைத்துள்ளது. வாய்மை வென்றுள்ளது. கடினமான கால கட்டத்தில், ஆதரவாக இருந்த, எனது நலம் விரும்பிகள், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல் பெருமையுடன் மாநிலம் முழுக்க பிரயாணம் செய்து கட்சியை வளர்ப்பேன். மீண்டும் பாஜகவை கர்நாடகாவில் ஆட்சிக்கு கொண்டுவருவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எடியூரப்பா தனது டிவிட்டர் கணக்கில், சத்யமேவ ஜெயதே என கூறியுள்ளார்.