மருத்துவ கல்வி நுழைவு தேர்வு: ஒவ்வொரு மாநிலத்திற்கும் 1 நிமிடம் வாதிட அனுமதி- உச்சநீதிமன்றம்
டெல்லி: மருத்துவ படிப்புக்கு ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு (NEET) நடத்துவதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதை கோபத்தோடு அணுகியுள்ள நீதிமன்றம், நாளை ஒவ்வவொரு மாநிலத்திற்கும் தலா 1 நிமிடம் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
மாநிலங்கள், தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்கள் மருத்துவ மாணவர்களுக்கு தனித்தனி நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது என்றும், நாடு முழுமைக்கும், ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும் என்றும் கடந்த மாதம் 29ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, தமிழகம், உள்ளிட்ட 8 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாநிலங்களுக்கு என்ன விளக்கம் வேண்டும் என்று தெளிவாக கேட்கட்டும். ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டாகிவிட்டது என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கை நாளை மதியம் 2 மணிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், மொத்தம் 20 நிமிடங்கள் வழக்கு நடைபெறும் என்றும், ஒவ்வொரு மாநிலமும், ஒரு நிமிடத்தில் தங்கள் நிலைப்பாட்டை கூறிவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.