மாணவர் அமைப்புக்கு தடை விவகாரம்- சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நேரில் ஆஜராக எஸ்.சி. ஆணையம் உத்தரவு!
டெல்லி: பெரியார்-அம்பேத்கர் பெயரிலான மாணவர் அமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து 8-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர் ஆகியோருக்கு தேசிய ஆதிதிராவிடர் (எஸ்.சி) நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்ததாக கூறி அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான பி.எல்.புனியா ஏற்கனவே விளக்கம் கேட்டு ஐ.ஐ.டி.க்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நோட்டீசுக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் மீண்டும் நேற்று முன் தினம் சென்னை ஐ.ஐ.டி. மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஆணையம் கோரியுள்ள விளக்கத்தை அனுப்பாவிட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர், தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பு ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற அமைப்புகளுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. முன்அனுமதி பெற்றே எந்த அமைப்பும் ஐ.ஐ.டி. நிறுவனத்தின் பெயரை உபயோகிக்க வேண்டும்.
சில விதிமுறைகளை அந்த அமைப்பு கடைபிடிக்கவில்லை. அதனால் பெரியார்- அம்பேத்கர் வாசகர் வட்டம் ஐ.ஐ.டி. வளாகத்தையும், அந்த நிறுவனத்தின் உள்கட்டமைப்பை பயன்படுத்தும் அனுமதியையும் மட்டுமே தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். அந்த அமைப்புக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் நேற்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோருக்கு 8-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.