பத்மநாபசுவாமி கோவிலில் பொக்கிஷம் உள்ள பி ரகசிய அறையை திறக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள பி ரகசிய அறையை திறக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இந்த கோவிலில் உள்ள ஏ முதல் எப் வரை உள்ள 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டன. இதில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் கிடைத்துள்ளன.
ஆனால் 'பி' அறையை திறக்கக்கூடாது என்றும், இந்த 'பி' நிலவறை 100 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை என்றும், இந்த நிலவறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து இதுவரை 'பி' அறை மட்டும் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் பி அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சிறப்பு வழக்கறிஞரான கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி சந்திராசூட் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 'பி' அறையை திறந்து அதிலுள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்க வேண்டியது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மற்ற அறைகள் அனைத்தையும் திறந்து நகைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதால், இந்த அறையை மட்டும் திறக்காமல் இருப்பது பொதுமக்களிடையே வீண் சந்தேகத்தை ஏற்படுத்தும். எனவே திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருடன் சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் ஆலோசனை நடத்தி 'பி' அறையை திறந்து நகைகளை கணக்கிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.