தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்க வேண்டாம்.. மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு
சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிக்கும் போது மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை என்று திருத்திய உத்தரவில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி: அண்மையில் சினிமா தியேட்டர்களி;ல் படங்கள் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தவிட்டது. தற்போது அந்த உத்தரவில் திருத்தம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்று திறனாளிகள் தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்க தேவையில்லை என்று கூறியுள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அண்மையில் நாடுமுழுவதும் அனைத்து சினிமா தியேட்டர்களிலும படங்கள் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதம் ஒலிபரப்பு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இது அனைத்து தியேட்டர்களிலும் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் தேசியக் கொடியையும் அங்கு காண்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த உத்தரவினை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இதற்கு ஒப்புக் கொண்ட மத்திய அரசு இந்த உத்தரவினை அமல்படுத்த அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உரிய சுற்றரிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்தது.
மேலும், தேசிய கீதத்தை முழுவதும் ஒலிபரப்ப வேண்டும், பகுதியாக ஒலிபரப்பிவிட்டு நிறுத்திவிடக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வணிக ரீதியில் இதனை செயல்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பல்வேறு இடங்களில் நடத்தப்படும் நாடகங்களில் தேசியக் கீதம் ஒலிபரப்படுவதை ஏற்றுக் கொள்ள இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது என்னுடைய தேசம், என்னுடைய தாய் மண் என்று மக்கள் உணர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், முன்னதாக அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்து அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.