கலிக்கோபுல் தற்கொலை: பகீர் தகவல்களால் சுப்ரீம்கோர்ட்டை அதிர வைத்த மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே!!
அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோபுல் தற்கொலை விவகாரத்தில் பரபரப்பான தகவல்களை தெரிவித்து உச்சநீதிமன்றத்தை மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே அதிர வைத்தார்.
டெல்லி: அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோபுல் தற்கொலை செய்வதற்கு முன்னதாக எழுதி வைத்ததாக கூறப்படும் மரண வாக்குமூலத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் ஆகியோரது மகன்கள் மீதும் குற்றம்சாட்டியுள்ளார் என மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்சநீதிமன்றத்தில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசலப் பிரதேசத்தில் நபம் துகி தலைமையில் காங்கிரஸ் அரசு நடைபெற்று வந்தது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கலிக்கோ புல் தலைமையில் கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினர். பின்னர் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் கலிக்கோ புல் முதல்வரானார்.
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 6 மாதங்கள் நடைபெற்ற வழக்கின் இறுதியில் கலிக்கோ புல் அரசு நீக்கப்பட்டு மீண்டும் காங்கிரஸ் அரசு அமைக்கப்பட்டது. புதிய முதல்வராக பெமா காண்டு பதவியேற்றார்.
தூக்கிட்டு தற்கொலை
இதனிடையே பதவி பறிபோன விரக்தியில் கலிக்கோ புல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடவடிக்கை எடுக்காத அரசு
கலிக்கோபுல் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவரது முதல் மனைவி டாங்விம்சாய் புல் வலியுறுத்தி வந்தார். ஆனால் அருணாச்சல பிரதேச அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தலைமை நீதிபதிக்கு கடிதம்
இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹருக்கு டாங்விம்சாய் புல் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் கலிக்கோபுல் தம்முடைய மரண வாக்குமூலமாக 60 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.
காங். தலைவர்கள், நீதிபதிகள் மீது புகார்
அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலரது முறைகேடுகள் தொடர்பாக கலிக்கோ புல் விவரித்துள்ளார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தம்முடைய கடிதத்தையே மனுவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என டாங்விம்சாய் புல் வலியுறுத்தி இருந்தார்.
விசாரணைக்கு உத்தரவு
இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் யு.யு. லலித் பெஞ்ச் இன்று இந்த மனு மீது விசாரணை நடத்தும் என உத்தரவிட்டிருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த முடிவு தமக்கு திருப்தி தருவதாக டாங்விம்சாய் புல் கூறியிருந்தார்.
துஷ்யந்த் தவே
இதனிடையே இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது டாங்விம்சாய் புல் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார். அப்போது துஷ்யந்த் தவே கூறியதாவது: கலிக்கோ புல் தம்முடைய மரண வாக்குமூலத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மகன் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும்போது நீதித்துறையின் விசாரணைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுப்பவே முடியாது.
நீதிபதிக்கும் எதிர்ப்பு
அதேபோல் இதை விசாரிக்கும் நீதிபதி ஏகே கோயல், உச்ச்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் பஞ்சாப்- ஹரியான உயர்நீதிமன்றத்தில் ஒரே பெஞ்சில் இருந்தவர். இந்த மனு மீதான விசாரணையில் இருந்து ஏகே கோயல் விலகிக் கொள்ள வேண்டும். இந்த பெஞ்ச் மனுவை விசாரித்தால் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வேன்.
ஜனாதிபதி மகன் மீதும்...
மேலும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் மீதும் கலிக்கோ புல் மரண வாக்குமூலத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகையால் நாங்கள் துணை ஜனாதிபதியிடம் நீதி கேட்டு முறையிடுகிறோம். இவ்வாறு துஷ்யந்த் தவே கூறினார்.
வாபஸ்
இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சிபிஐ விசாரணை கோரி டாங்விம்சாய் புல் கடிதம் எழுதியதை திரும்பப் பெற உச்சநீதிமன்ற பெஞ்ச் அனுமதித்தது. துஷ்யந்த் தவேவின் ஆவேசத்தால் உச்சநீதிமன்ற வளாகம் பெரும் பரபரப்பு நிலவியது.