கே -லெஸ்பியன் ஓ.கேதான்... ஜெட்லி, சிதம்பரம்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை
டெல்லி: ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதி பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதில் குற்றம் ஏதுமில்லை. பரஸ்பரம் சம்மதத்துடன் தனிமையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பாலியல் உறவு கொள்வது தவறில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 2013ஆம் ஆண்டு, ஐ.பி.சி. 377வது பிரிவின் படி ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்; இதற்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரும் மனுக்களையும் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடிசெய்தது. அதே நேரத்தில் மறுசீராய்வு மனு இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதனிடையே டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, உச்சநீதிமன்றம் 2013ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமையை உலகம் அங்கீகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புதான் சரியானது என தெரிவித்திருந்தார்.
இதேபோல் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அற்புதமான ஒன்று. அதை உச்சநீதிமன்றம் ஆமோதித்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.