தியேட்டர்களில் தேசிய கீதம்.. பள்ளி பருவத்தோடு மறந்த கீதத்தை இனியாவது ஒழுங்காய் பாடுவோம்!
டெல்லி: தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையில் தேசிய கொடியை காட்டவேண்டும். தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையரங்குக்குள் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று, வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தேசிய கீதம் ஒலிக்கப்படுவதில் வணிகரீதியான ஆதாயம் எதுவும் தேடக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தேசிய கீதம் இசையமைப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில அரசுகளுக்கும் மத்திய அரசிடம் இருந்து சுற்றறிக்கை வந்தபிறகு திரையரங்குகளில் இனி படம் திரையிடப்படுவதற்கு முன் தேசிய கீதம் ஒலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பள்ளிக் காலம்
இப்போதெல்லாம் தேசிய கீதம் என்பது பள்ளி பருவத்திற்கு பிறகு கேட்க முடியாத பொருளாகிவிட்டது. இனிமேல் சிறியவர் முதல் பெரியவர் வரை தேசிய கீதத்தை கேட்க, இந்த உத்தரவு பயன்தரும்.
52 வினாடிகள் அவசியம்
தேசிய கீதத்தை 52 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால், நாமாக வாய் திறந்து பாடும்போது இந்த கணக்கில் கோட்டை விட்டுவிடுவோம். இனிமேல் திரையரங்குகளில் 52 வினாடிகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்பதால், அதை கேட்பது நல்ல பயிற்சியை தரும்.
தேச ஒருமைப்பாடு
தேசத்தை ஒருமுகப்படுத்த ஏதாவது ஒரு பிணைப்பு அவசியம். தேசிய கீதம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, குஜராத் முதல் அசாம் வரையிலும், "ஜன கன மன" என தொடங்கும் தேசிய கீதத்தை கேட்டதும், வேறுபாடுகள் மறக்கப்பட்டு இந்தியர் என்ற உணர்வு மேலோங்குவதை பார்க்க முடியும்.
புது முயற்சி
கிரிக்கெட் உலக கோப்பை போன்ற முக்கிய போட்டிகளின்போது தேசிய கீதம் இசைக்கப்படும்போது, ரசிகர்களுக்கு அது தரும் உத்வேகமே தனி என்பதை விளையாட்டு ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள். இனிமேல் தியேட்டர்களிலும் தேசிய ஒருமைப்பாடு ஓங்கும் என நம்பலாம்.