மாஜி நீதிபதி கர்ணன் 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. 6 மாத சிறை தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
டெல்லி: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. 6 மாத சிறை தண்டணையை அனுபவித்தே ஆகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் இன்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்தார். அதில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சிறைத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்றும், இது குறித்த மனுவை பரிசீலித்து பதிவு செய்து அதனை விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ' கர்ணன் சார்பான எந்த மனுவையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கால சிறைத் தண்டனையை அவர் அனுபவித்தே ஆகவேண்டும். இதுதொடர்பாக எத்தனை முறை மனுக்கள் மூலம் கோரிக்கை வைத்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பொதுவாக நீதிமன்ற பதிவாளர் மனுவை பதிவு செய்ய எடுத்துக் கொண்டால் மட்டுமே அது விசாரணைக்கு வரும். எனவே கர்ணன் தொடர்பான மனுவை பதிவு செய்யவே அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால் அவர் வேறு எந்த நீதிமன்றத்தையும் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
5 முறைக்கும் மேலாக கர்ணனின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. முன்னாள் நீதிபதி கர்ணன் கடந்த மாதம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவையில் கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.