அன்புமணி மீதான சுங்க சாவடி வழக்கு ரத்துக்கு எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தள்ளுபடி!
டெல்லி: பா.ம.க. இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸை சுங்கச்சாவடி மோதல் வழக்கில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 2013 ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி காரில் அன்புமணி ராமதாஸ் சென்று கொண்டு இருந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் காரில் பின் தொடர்ந்து சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செங்குறிச்சி ஏரி சுங்கச் சாவடியில் அவர்களுக்கும் சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கப்பட்டனர். சுங்கச் சாவடியும் சேதப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் மனுதாக்கல் செய்தார். அதில் அரசியல் காரணங்களுக்காக தன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
இம்மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் அன்புமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஒரு கட்சி தலைவர் செல்லும்போது தொண்டர்களும் வாகனங்களில் செல்வது வழக்கம். தொண்டர்கள் செய்ததற்கு தலைவர் எப்படி பொறுப்பு ஏற்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுங்கச்சாவடி தாக்கப்பட்ட போது பதிவான கண்காணிப்பு கேமிரா காட்சிகளை பார்க்குமாறு நீதிபதியிடம் கூறினார். அதை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.