கோவன் என்ற சாமானிய குடிமகனுக்காக தமிழக அரசு ஏன் இப்படி மெனக்கெடுகிறது? சாடிய சுப்ரீம் கோர்ட்
டெல்லி: பாடகர் கோவனை காவலில் வைத்து விசாரிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஒரு சாமானிய குடிமகனுக்காக தமிழக அரசு இப்படி மெனக்கெடுகிறது? ஒரு தனிமனிதனுக்காக அட்டர்னி ஜெனரலே ஆஜராவதா? என்று உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.
மதுவிலக்கை வலியுறுத்தி "மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலை பாடியதற்காக ம.க.இ.க. அமைப்பைச் சேர்ந்த பாடகர் கோவன் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கும் தொடரப்பட்டது.
அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற போலீசாரின் மனுவையும் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இம்மனுவை நீதிபதிகள் எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது.
அப்போது தமிழக அரசு சார்பாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜரானார். இம்மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தனிப்பட்ட ஒரு சாமானியனுக்காக தமிழக அரசு ஏன் இப்படி நடந்து கொள்கிறது? அதுவும் தனிமனிதருக்கு எதிரான இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் ஆஜராக வேண்டுமா? என்று கேள்வி மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தள்ளுபடி செய்துவிட்டனர்.