பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளாவுக்கு தடை... சுப்ரீம் கோர்ட் அதிரடி!
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டி வருவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி: கொங்கு மண்டல மக்களின் நீராதராமான பவானி ஆற்றில் தடுப்பணை கட்டி வரும் கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று தடை விதித்துள்ள்ளது.
மேல்பவானியில் உற்பத்தியாகும் பவானி ஆறானது, கேரள எல்லையில் 24 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இந்த பகுதிகளில் 6 இடங்களில் 4 கி.மீ. தூரத்தில் தடுப்பணைகளை கட்ட கேரள அரசு திட்டமிட்டது.
இதன்படி தேக்கோட்டை பகுதியில் ஏற்கனவே 150 அடியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மேலும் மஞ்சக்கட்டி, அட்டப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகளை அந்த மாநில அரசு கட்டி வருகிறது.
பவானி ஆற்றை நம்பி திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் குடிநீர் ஆதாரம் உள்ளது. பவானி சாகர் அணை மூலம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
கேரள அரசு தடுப்பணைக் கட்டினால் தங்களது குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு கடும் பஞ்சம் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
அந்த வழக்கானது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் கேரளாவின் புதிய அணை உள்ளிட்டவை குறித்து 15 நாளில் தமிழகத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு கேரளா அணை கட்டுவதற்கு தடை விதித்தனர்.