சாமிக்கு எதிராக அதிமுக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை
டெல்லி: அதிமுக அரசு சுப்பிரமணியம் சாமிக்கு எதிராக தொடர்ந்துள்ள கிரிமினல் அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், அரசியல் சாசனச் சட்டப்படி, ஐபிசி, சிஆர்பிசி பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்குகளைத் தொடர முடியாது என்று கூறிய சாமியின் வாதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் சுப்பிரமணியன் சாமி தனது டிவிட்டரில் வெளியிட்ட சில டிவிட் செய்திகள் தொடர்பாக ஐந்து அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போய் விட்டதால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்தார் சாமி.
Tomorrow I am arguing in the SC what could become a landmark in our democracy--constitutionality of criminal law on defamation.
— Subramanian Swamy (@Swamy39) October 29, 2014
அதேசமயம், இந்த அவதூறு வழக்குகளில் தான் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். மேலும் இந்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடிசெய்யவும் அவர் கோரியிருந்தார்.
அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று அவரது மனு மீதான மேல் விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சாமி மீதான அவதூறு வழக்குகள் அனைத்திற்கும் இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அரசியல் சாசனப்படி, ஐபிசி மற்றும் சிஆர்பிசி ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்குகளைத் தொடர முடியாது என்று வாதிட்ட சாமியின் கூற்றை ஏற்ற நீதிபதிள் இதுகுறித்து மத்திய அரசும், தமிழக அரசும் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.