ஜெ. அரசுக்கு சாட்டையடி: 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் ரத்து: சுப்ரீம்கோர்ட் அதிரடி
டெல்லி: தமிழக சட்டசபையில் இருந்து 6 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
தமிழக சட்டசபையின் கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மார்ச் மாதம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய தே.மு.தி.க. சட்டசபை துணைத்தலைவர் மோகன்ராஜ் முதல்வர் ஜெயலலிதா பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சட்டசபையில் கடும் அமளி ஏற்பட தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அப்போது சபை காவலர்களுக்கும் தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டது.
முதலில் கூட்டத் தொடர் முடியும் வரை தேமுதிக எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் இடைநீக்கம் செய்தார். பின்னர் சட்டசபை உரிமைக் குழு ஆய்வுக்கு விசாரணை நடத்தி ஏப்ரல் 1ம் தேதியன்று தேமுதிகவின் சி.சந்திரகுமார் (ஈரோடு மேற்கு), மோகன்ராஜ் (சேலம் வடக்கு), எஸ்.ஆர்.பார்த்திபன் (மேட்டூர்), வெங்கடேசன் (திருக்கோவிலூர்), சி.எச்.சேகர் (கும்மிடிப்பூண்டி), தினகரன் (சூலூர்) ஆகிய 6 எம்.எல்.ஏக்களை ஓராண்டு காலத்துக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். எஞ்சிய தேமுதிக எம்.எல்.ஏக்களை 6 மாத காலத்துக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் 6 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில் தங்களை சஸ்பெண்ட் செய்திருப்பதால் தொகுதி மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இம் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெலமேஷ்வர், சப்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சஸ்பெண்ட் தொடர்பாக பதிலளிக்கும்படி சபாநாயகர் தனபால், சட்டசபை செயலர் ஜமாலுதீன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்க சட்டசபைக்கு அதிகாரம் உள்ளதாக விளக்கமளித்திருந்தார்.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்தனர். இந்த 6 எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன; எம்.எல்.ஏக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவாகும்.