மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை- காஷ்மீர் ஹைகோர்ட் ஆணையை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!
டெல்லி: மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தடை குறித்து 3 நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளிக்கவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பசுக்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடுத்த நிறுத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பரிமோக் ஷ்ஷேத் என்பவர் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் ஸ்ரீநகர் பெஞ்ச் நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்புகளை அளித்திருந்தனர். அதில் ஒன்று மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதித்து பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், இருவேறுபட்ட தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கியுள்ளதால் குழப்பமான நிலைமை உருவாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால் நிலைமை மோசமடைந்துள்ளது. தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆகையால் உச்சநீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இம்மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற ஆணையை 2 மாத காலம் நிறுத்தி வைக்க வேண்டும்; மேலும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 3 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் அமைத்து இந்த விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனிடையே ஜம்மு காஷ்மீர சட்டசபையிலும் மாட்டிறைச்சி விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏக்கள் மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து அமளியில் ஈடுபட்டனர்.