அரசாங்க நிதி உதவிக்காக 10 மாதங்களில் 5முறை 'கர்ப்பிணியான' 60 வயது பெண்!
லக்னோ: அரசு திட்டத்தில் கிடைக்கும் நிதி உதவிக்காக, உத்தரபிரதேச மாநிலத்தில் பல பெண்கள், நூதன முறையில் ஏமாற்றியுள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது.
2005ம் ஆண்டு, ஜனனி சுரக்ஷா என்ற திட்டம் நாடு முழுவதிலும் கொண்டுவரப்பட்டது. பேறுகால நேரங்களில் பெண்கள் மருத்துவமனைக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவித்து, இறப்பு விகிதத்தை குறைப்பது இதன் நோக்கம்.
தாய் நல்ல சத்தான ஆகாரம் சாப்பிட உதவும் வகையில், இத்திட்டத்தின்கீழ், ரூ.1400 மாதம்தோறும் குறிப்பிட்ட காலத்துக்கு அளிக்கப்படும். இந்த நிதியை பெறுவதற்காக உ.பியில் பெண்கள் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது, அம்மாநில அரசின் ஆடிட்டிங்கில் தெரியவந்துள்ளது. உதாரணத்துக்கு, கடந்த 3 மாதங்களில் ஒரு பெண் மட்டும், 4 முறை, இத்திட்ட பலனை பெற்றுள்ளார். பாரிச் என்ற பகுதியை சேர்ந்த 60 வயது பெண் கூட, தானும் கர்ப்பமாக இருப்பதாக கூறி நிதி உதவி பெற்றுள்ளார். அதுவும், கடந்த 10 மாதங்களில், 5 முறை கர்ப்பமாக இருப்பதாக அவர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
அரசு அதிகாரிகளுக்கு சிறிது பணத்தை கொடுத்து, இப்பெண்கள் காரியம் சாதித்துள்ளனர். இதனால், தாய்-சேய் நலனுக்காக கொண்டுவரப்பட்ட இத்திட்ட நிதி, யார், யார் கைகளுக்கோ சென்று சேர்ந்துள்ளது. ராஜேஸ்வரி தேவி என்ற பெண், 12 வருடங்கள் முன்பு தாய் ஆனவர். ஆனால், திட்டத்தில் கிடைக்கும் பணத்துக்காக, இப்போதுதான் பிரசவித்தது போல கணக்கு காட்டி நிதி உதவி பெற்று வருகிறார்.
சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் சுபோத் ஷர்மா கூறுகையில், "நான் ஆடிட்டிங் அறிக்கையை பரிசீலித்து வருகிறேன். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.